தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது செவ்வாயன்று (07.06.2011) விவாதம் துவங்கியது. இந்த விவாதத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் பணநாயகத்தை முறியடித்து, ஜனநாயகத்தை நிலைநாட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய தமிழக வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமைதி புரட்சிக்கு தலைமை தாங்கி தமிழகத்தில் நடைபெற்ற ஊழல் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி மகத்தான மக்கள் ஆதரவோடு மூன்றாவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாறு காணாத வெற்றி பெற்று புதிதாக ஆட்சியமைத்துள்ள முதலமைச்சர், வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மேட்டூர் அணையில் இருந்து வழக்கத்தை காட்டிலும் முன்னதாகவே ஜூன் 6ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டதை பாராட்டுகிறேன். இதன் மூலம் காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு வழிவகுத்ததாக அந்த மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பு பெறப்பட்ட பிறகும் கடந்த 5 ஆண்டு காலத்தில் திமுக நீதிமன்ற தீர்ப்பை அமலாக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதன் பிறகு என்ன ஆனது என்று திரும்பிக்கூட பார்க்க வில்லை.
முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கீடு :- காவேரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில்(கெசட்டில்) வெளியிட வேண்டும். இது கர்நாடக அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும். அதற்கான நடவடிக்கையை எடுக்க இந்த அரசு உறுதியான நடவடிக்கையை மேற் கொள்ளும்.
கே.பாலகிருஷ்ணன் :- முதலமைச்சரின் விளக்கத் திற்கு நன்றி.
முதலமைச்சராக பதவி யேற்ற அன்றே தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றும் வகையில் 7 திட்டங்களை அமலாக்கியிருப்பது நல்ல துவக்கம். அதே போல் அரசு விழாக்களை ஆடம்பரம் இல்லாமல் மிக எளிமையாக நடத்தி வருவது வரவேற்கத்தக்கது.
முதியோர் ஓய்வூதிய பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் உதவிதொகை வழங் குவது, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்குவது, கடைகோடியில் உள்ள கேபிள் இயக்குநர்கள் பாதிக்கப்படாமல் தனியார் கேபிள் டிவி கொள்ளையைத் தடுக்க அரசுடைமை யாக்குவது, அனைத்து கிராமங்களுக்கும் தார்ச்சாலை, செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மின்விசிறி, கிரைண்டர், மிக்சி வழங்குவது போன்ற பல திட்டங்கள் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.
இவை அனைத்திற்கும் மேலாக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என அறிவித்திருப்பது முன் எப்போதும் இல் லாத சிறப்பு வாய்ந்த சாதனையாகும்.
கடந்த ஆட்சியில் திமுக தலைவரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் சிபிஎம் தலைவர் நாவலன் உயிருக்கு ஆபத்து என காவல் துறையிடம் பலமுறை புகார் செய்யப்பட்டது. ஆனால், பாதுகாப்பு கொடுக்கப்பட வில்லை. அவர் மனு கொடுத்த ஒருவார காலத்திலேயே வெட்டி படுகொலை செய் யப்பட்டார். இது காவல் துறையினரின் மிக மோசமான செயலுக்கு எடுத்துக் காட்டாகும்.
அடுத்ததாக நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கந்துவட்டி கொடு மையை எதிர்த்து போராடிய சிபிஎம் தோழர் வேலுச்சாமி தனது உயிருக்கு ஆபத்து என காவல் துறையில் புகார் கொடுத்து வீடு திரும்புவதற்குள் அடுத்த அரைமணி நேரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட் டார். காவல் துறைக்கும், சமூக விரோதிகளுக்கும் எப்படிப்பட்ட இணைந்த செயல்பாடு கடந்த ஆட்சியில் இருந்தது என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. ஆகவே, காவல் துறையை ஒழுங்குப்படுத்துவதையும், சட்டம் ஒழுங்கை மேன்மைப் படுத்துவதையும் முன்னுரிமை பணியாக எடுத்துக் கொண்டதை பாராட்டுகிறேன்.
வேலூரில் அதிமுகவை சேர்ந்த சிலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட செய்தி வந்தவுடன் அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கியதுடன் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை பாராட்டுகிறேன். இந்த அணுகுமுறை தொடர வேண்டும்.
கடந்த ஆட்சியில் சட்ட விரோதமாக பறிக்கப்பட்ட பலருடைய சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிய நபருக்கு வழங்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று அறி வித்திருப்பது பாராட்டுகுரியது. 2 ஜி அலைக்கற்றை ஊழலில் கைதான ஆண்டி முத்து ராஜா, அவரது குடும்பத்தினர் கிரின் ஹவுஸ் பிரோமோட்டர்ஸ் என்ற பெயரில் அந்த பகுதியில் ஏழை, தலித் மற்றும் பிற் படுத்தப்பட்டவர்களின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கியுள்ளனர். இது போன்று மதுரை திருமங்கலம் பகுதியில் ஏழைகளை மிரட்டி நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சிக் காலத்தில் மணல் கொள்ளைக்குக் காரணமாக இருந்த டெண் டர்களை ரத்து செய்து புதிதாக டெண்டர் விட வேண் டும்.
ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ள பொதுவிநியோகத் துறையை ஒழுங்குப்படுத்தவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும் நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, ஆன்லைன் வர்த்தகம் சிறு வர்த்தகத்தில் வால் மார்ட் போன்ற அந்நிய பகாசூரா கம்பெனிகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட மக்கள் விரோத நட வடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த மோசமான நடவடிக்கைகளை எதிர்க்கவும், தொடர்ந்து மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் ஒதுக்கீடுகளை வெட்டி குறைப்பதை எதிர்த்தும் உறுதியான போராட்டத்தை தமிழக அரசு நடத்த வேண்டும்.
போலி குடும்ப அட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டும். அதே சமயம் புதியதாக குடும்ப அட்டை வேண்டி நீண்டகாலமாக மனுகொடுத்து அவதிப்படும் பலலட்சம் குடும்பங்களுக்கு உடனடியாக புதிய அட்டை வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை போக்கிட மத்திய அரசு ஆயிரம் மெகாவாட் கூடுதலாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதை வரவேற்கிறோம். மாநில அரசு கேட் டுள்ள மின்சாரத்தை வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டும்.